கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்ம வடிவிலான கிணறும் உள்ளன. அண்மையில் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது. முதன்மைக் கருவறைச் சுவரின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள், மேலும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீஸ்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் ராஜேந்திரன் என்றும் கருதுகின்றனர். சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் இக்கோயிலில் அமைந்துள்ளது.தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது. முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக்குவந்த ஆறாம் ஆண்டில் கட்டப்பட்டதாகச் சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதினாலும், கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குரிய நன்கொடைகளையெல்லாம் ராஜேந்திரன் இக்கோயிலுக்குத் திருப்பிவிட்டானென்றும், பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டடக் கலைஞர்களையும் சிற்பிகளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தான் என்றும் கருதப்படுகிறது.கங்கைவரை சென்று போரிட்டு வெற்றிகொண்ட முதலாம் ராஜேந்திரன், தன் தந்தை கட்டிய கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்துதான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் ராஜேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்குக் கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. 1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2004-ல் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப் பாரம் பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. 10 -12ஆம் நூற்றாண்டுகளில், வெவ்வேறு மூன்று சோழ அரசர்களால் கட்டப்பட்ட இம்மூன்று கோயில்களும் அதிகளவிலான ஒற்றுமை அமைவுகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.