உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டுவை முறுக்கு வியாபாரி ரூ.1.51 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிராமத்தில் விநாயகர் சிலை வைத்திருந்தனர். இந்த சிலையின் கையில் லட்டு ஒன்று வைத்திருந்தனர். பூஜைகள் முடிந்து நேற்று சிலையை கண்மாயில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். முன்னதாக விநாயகர் கையில் வைத்திருந்த லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது.
இதில், அதே ஊரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி மூக்கன் என்பவர் கலந்து கொண்டு லட்டுவை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். இதனால், ஆச்சரியமடைந்த கிராம மக்கள் இனி ஆண்டுதோறும் விநாயகர் சிலையில் வைத்து பூஜிக்கப்படும் லட்டு ஏலம் விடப்படும். ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு ஏலத்தொகை கட்டும்போது 1 பவுன் தங்கமோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும்’ என அறிவித்தனர்.