அதன்படி இந்தாண்டு 467வது கந்தூரி விழா இன்றிரவு (14ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாகை பேய் குளத்தில் இருந்து கொடி ஊர்வலம் இன்று பிற்பகல் துவங்குகிறது. நாகை நகரின் முக்கிய கடைவீதிகள் வழியாக தர்கா அலங்கார வாசலுக்கு கொடி ஊர்வலம் இரவு 8.30 மணிக்கு சென்றடைகிறது.
இதைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிறிய கப்பலில் கொண்டு வரப்பட்ட கொடிகள் இறக்கப்பட்டு சாஹிப் மினரா, தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜசோழன் கட்டி கொடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசல் முன் அமைந்துள்ள பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஓட்டு மினரா, முதுபக் மினரா ஆகிய 5 மினராக்களுக்கு கொண்டு செல்லப்படும்.
பின்னர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றப்படும். முக்கிய விழாவான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 23ம் தேதி இரவு நடக்கிறது. விழாவையொட்டி தர்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.