இந்நிலையில் இந்த ஆண்டு 722ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புனித கொடி மரம் நிலைநிறுத்தும் நிகழ்ச்சி, தர்கா பரம்பரை முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு தாவூதியா பள்ளிவாசலில் மௌலூது ஓதப்பட்டது. 8.30க்கு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
பின்னர் தர்காவிலிருந்து ஊர்வலமாக கொடிமரம் மேடைக்கு சென்ற டிரஸ்டிகள் உரையாற்றினர். அதைத்தொடர்ந்து 9 மணியளவில் புனித துவா ஓதப்பட்டு 95 அடி உயர புனித கொடி மரம் நிலை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வரும் 14ம் தேதி புனித கொடியேற்றும் நிகழ்ச்சியும், 23ம் தேதி புனித சந்தன கூடு ஊர்வலமும், 27ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.