அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நவ்ரங்புராவில் நடைகடை வைத்திருப்பவர் மெகுல் தாக்கர். அந்த பகுதியில் உள்ள இன்னொரு நகை கடையில் மேலாளராக பணியாற்றும் பிரசாந்த் பட்டேல், மெகுல் தாக்கரை தொடர்பு கொண்டு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதில்,2.1 கிலோ தங்கத்துக்கு ரூ.1.60 கோடி தருவதாக பிரசாந்த் விலை பேசினார். அதை ஏற்று கடந்த 24ம் தேதி அங்காடியா எனப்படும் கூரியர் அலுவலகத்துக்கு வரும்படி பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதை நம்பிய மெகுல் தாக்கர் தன்னுடைய கடை ஊழியர்களிடம் தங்கத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் சென்ற போது 3 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் பணத்தை கொடுத்து விட்டு தங்கத்தை வாங்கி கொண்டனர். அதில் ரூ.1.30 கோடி இருந்தது.
மீதி உள்ள ரூ.30 லட்சத்தை எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு 2 பேர் மாயமாகி விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் கொடுத்த ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதிலாக இந்தி நடிகர் அனுபம் கேரின் படம் அச்சடிப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நகை கடை ஊழியர்கள் அவர்களுடன் வந்திருந்த ஒருவரை பிடித்து கேட்டுள்ளனர். அப்போது அந்த நபர் தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பணத்தை எண்ணும் இயந்திரத்தை கொடுப்பதற்காக வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த நகை கடை அதிபர் மெகுல் தாக்கர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.