Monday, July 1, 2024
Home » கேளம்பாக்கம் அருகே சோகம் மகன்களுடன் கருத்து வேறுபாடால் வயதான தம்பதி தற்கொலை

கேளம்பாக்கம் அருகே சோகம் மகன்களுடன் கருத்து வேறுபாடால் வயதான தம்பதி தற்கொலை

by Arun Kumar

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே 3 மகன்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர்களின் பெற்றோரான வயதான தம்பதியரில் ஒருவர் தூக்கிட்ட நிலையிலும், மற்றொருவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி சிவலிங்கம் (60), ராணி (55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இத்தம்பதி கேளம்பாக்கம் அருகே சாத்தங்குப்பம், ராஜேஸ்வரி நகர் பகுதியில் மனை வாங்கி வீடு கட்டி, தங்களின் 3வது மகன் ரமேஷ் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்தனர்.

இத்தம்பதியின் மூத்த மகன் ருத்ரன் திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வசிக்கிறார். 2வது மகன் தயாளன், கண்டிகையில் பழக்கடை நடத்தி வருகிறார். 3வது மகன் ரமேஷ், கேளம்பாக்கம் மார்க்கெட் சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாம்பாக்கம் பகுதியில் சிவலிங்கம் தனியாக பழக்கடை நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக 3 மகன்களுக்கும் இடையே தந்தை சிவலிங்கத்துடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், இதனால் வயதான தம்பதிகளான சிவலிங்கம், ராணி ஆகிய இருவரும் கேளம்பாக்கம் வீட்டின் கீழ்தளத்தில் தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக தனது 3 மகன்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வயதான காலத்தில் தனியே இருக்கவேண்டி நேர்ந்து விட்டதே என சிவலிங்கமும் ராணியும் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வயதான தம்பதி சிவலிங்கமும் ராணியும் நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். பின்னர் இன்று காலை 9 மணி மேலாகியும் இருவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.  இதில் சந்தேகமான 3வது மகன் ரமேஷ், வீட்டின் கீழ்ப்பகுதிக்கு வந்து ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அங்கு ஒரு அறையில் சிவலிங்கம் தூக்கிட்ட நிலையிலும், மற்றொரு அறையில் ராணி விஷம் அருந்தி இறந்த நிலையில் இருப்பதை பார்த்து ரமேஷ் அதிர்ச்சியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு உள்பக்கமாக பூட்டியிருந்த அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பின்னர், அங்கு இறந்து கிடந்த சிவலிங்கம், ராணி ஆகிய இருவரின் சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

eighteen − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi