புதுடெல்லி: ஜி20 பிரகடனத்தால் பெருமைபட ஒன்றுமில்லை என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார். டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் ஒட்டுமொத்த பார்வையும் உலக நாடுகளை ஈர்த்துள்ளன. இந்த மாநாட்டின் போது ஜி20 நாடுகளின் தலைவர்களின் கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ கூறுகையில், ‘ஜி20 நாடுகளின் பிரகடனத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து குறிப்பிடப்படவில்லை. ஜி-20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரகடனத்தில், பெருமைபட ஒன்றுமில்லை. இருந்தும் உக்ரைனின் நட்பு நாடுகள், எங்களுக்காக செய்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும் ஜி20 பிரகடனத்தின் ஒருபகுதியை வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைன் குறித்த சில பகுதிகளை சிவப்பு நிறத்தில் மார்க் செய்யப்பட்டிருந்தது.