ஜி20 மாநாட்டு தலைவர்களை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜி-20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் மனிதநேய அடிப்படையிலான நடவடிக்கைகள் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் , சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஜி-20 மாநாடு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமான மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை ஒன்றிய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்து பேசினார். இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி வருகிறார். ஜி-20 இன் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் நிலநடுக்கம் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்க விரும்புகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இக்கட்டான நேரத்தில் மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என கூறினார். இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் நமது நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு அந்த நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள இருக்கையின் முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.