Sunday, September 29, 2024
Home » எதிர்கால தலைமுறையினர் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக வளர வேண்டும்: ‘மா மதுரை விழா’வை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

எதிர்கால தலைமுறையினர் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக வளர வேண்டும்: ‘மா மதுரை விழா’வை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்கால தலைமுறையினர் வளர வேண்டும் என்று ‘மா மதுரை விழா’வை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் ‘மா மதுரை விழா’-வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக, தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை. பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம். 2013ம் ஆண்டு முதல் ‘மா மதுரை போற்றுவோம்’ விழா நடந்துக்கொண்டு இருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை எம்பி சு.வெங்கடேசன் முயற்சியால் இது தொடங்கப்பட்டது.

விழாக்குழு தலைவராக மதுரை தியாகராசர் குழும தலைவர் கருமுத்து கண்ணன், விழாக்குழு துணைத்தலைவராக மதுரை அபராஜிதா குழும தலைவர் பரத் கிருஷ்ணன் சங்கர் ஆகிேயாரை கொண்டு இந்த விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து கொண்டு வந்தது. வரலாற்றை போற்றுவோம், வைகையைப் போற்றுவோம், மாமதுரையை போற்றுவோம் போன்ற தலைப்புககளில் இது நடந்துக்கொண்டு வருகிறது. இந்த விழா நடக்கும் நாட்களில் மதுரை மாநகர் புத்துயிர் பெறுகிறது என்றே சொல்லலாம். வைகை தொடங்கும் இடத்தில் இருந்து, அது கடலில் கலக்கும் இடம் வரைக்குமான ஆற்றின் பாதை, அதன் கரைகளில் அமைந்திருக்கும் ஊர்கள் ஆகியவற்றின் மாதிரி, வைகை ஆற்றுக்குள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

காலந்தோறும் மதுரை நகரம் மாறிய காட்சி ஓவியமாகவும், மாதிரி நகரமாகவும் கண்காட்சியாக தமுக்கம் திடலில் அமைக்கப்பட்டிருக்கும். மதுரை பிரமுகர்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். பள்ளி, மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், ஊர்வலம், வாணவேடிக்கை ஆகியவை நடத்தப்படுகிறது. இருபுறமும் விளக்குகள் ஏந்தி பொதுமக்கள் நிற்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட ‘இந்திர விழா’ போல இவை நடத்தப்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதேபோல், இந்த ஆண்டும் மாமதுரை போற்றும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று தொடங்கி 11ம் தேதி வரை இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் பெருவிழாவாக இதை நடத்திக்கொண்டு வருகிறீர்கள். இந்த ஆண்டு மதுரை போற்றும் விழாவை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்லும் இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ அமைப்புடன் இளையோர் அமைப்பான ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பை பாராட்டுகிறேன். ஊரை போற்றும் இளைஞர்களாக நீங்கள் வளர்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தர வேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டு திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்கால தலைமுறை வளர வேண்டும். இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும்.

சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும். மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்ற அடிப்படையில் இதுபோன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மதுரை எம்பி வெங்கடேசன், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்எல்ஏ தளபதி, மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா, அரசு உயர் அதிகாரிகள், மதுரை யங் இந்தியன்ஸ் தலைவர் பைசல் அகமது, மா மதுரை விழா தலைவர் விக்ராந்த் கார்மேகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi