முன்பெல்லாம் நாம் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது என்பது அபூர்வமாகத்தான் இருக்கும். வெளியில் சென்றாலோ, வேறு ஏதாவது விசேஷம் வந்தாலோதான் நாம் ஓட்டல் பக்கம் செல்வோம். ஆனால் இப்போது நமது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகவே ஹோட்டலுக்கு செல்லும் வழக்கம் வந்துவிட்டது. வாழ்க்கை முறை, நேரமின்மை போன்ற காரணங்களே இதற்கு காரணமாக இருக்கிறது. ஹோட்டலுக்கு செல்லாவிட்டாலும் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் ஆர்டர் செய்தாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற நேரங்களில் நாம் சுவைக்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம். அதேசமயம் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா? ஆரோக்கியத்தோடு சுவையைத் தரும் உணவகங்கள் மிகச் சொற்பமாகத்தான் இருக்கின்றன. இவ்வாறு சுவை, ஆரோக்கியம் என இரண்டு விசயத்திலும் தனிக்கவனம் செலுத்தும் ஹோட்டல்களில் ஒன்றாக விளங்குகிறது தி.நகர் கோபால கிருஷ்ணன் சாலையில் இயங்கி வரும் ‘ஸ்மூஸ் ரெஸ்டாரெண்ட்’. மல்ட்டி குசைன் ரெஸ்டாரெண்டாக செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் உள்ளூர் உணவுகளில் இருந்து வெளிநாட்டு உணவுகள் வரை அனைத்துமே ஸ்பெஷல் டிஷ்சாக கிடைக்கிறது.
இதன் உரிமையாளர் கே.ஜெயக்குமாரைச் சந்தித்துப் பேசினோம்.“பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். பி.டெக் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் சேல்ஸ் டிப்பார்ட்மென்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அடிப்படையில் நான் ஒரு உணவுப்பிரியன். எங்காவது, ஏதாவது ஸ்பெஷல் கிடைக்கிறது என்றால் முதல் ஆளாக தேடிப்போய் சாப்பிடுவேன். கல்லூரி படிக்கும்போதே பிரியாணிக்கடை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கல்லூரி முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தாலும் அந்த ஆசை அப்படியேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, ஒரு ஃபுட்டியாக மாறி ஒவ்வொரு உணவகமாக சாப்பிட ஆரம்பித்தேன். அதன்பிறகு நான் சாப்பிட்ட உணவு களைப் பற்றி எனது சோசியல் மீடியாவில் வீடியோ பதிவாக செய்து வந்தேன். இப்படியே இரண்டு ஆண்டுகள் போனது. அதன்பிறகு தனியாக ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்கலாமென யோசனை வந்தது. அப்படித்தான் இந்த உணவகத்தை தொடங்கினேன். பிரியாணிக்கடை திறப்பதுதான் ஆசை என்றாலும், அதைக் கொஞ்சம் பெரியதாக அனைவருக்கும் பிடித்த வகையில் எல்லா உணவுகளும் கிடைக்கும்படி மல்ட்டி குசைன் வடிவமைப்பில் ரெஸ்டாரெண்ட்டாக தொடங்கி இருக்கிறேன்.
எனது உணவகத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அதாவது, பணம் குறைவாக வைத்திருப்பவர்கள் கூட கடைக்கு வந்து சாப்பிடும் வகையில் தொடங்கி இருக்கிறேன். அதுபோன்ற நபர்களும், எல்லா மாதிரியான உணவுகளைச் சாப்பிடும் வகையில் பல காம்போக்கள் கொடுத்து வருகிறேன். 160 ரூபாயில் இருந்து காம்போக்கள் தொடங்குகிறது. எல்லா காம்போக்களிலுமே சிக்கன், மட்டன் என ஏதாவது ஒன்று வரும்.எனது உணவகத்தில் சூப்பில் தொடங்கி வெஜ் ஸ்டார்ட்டர்ஸ், பிரியாணி, நான்வெஜ் ஸ்டார்டெர்ஸ், ரைஸ், நூடுல்ஸ், கிரில், பார்பிக்யூ, கிரேவிஸ், பிரட், தந்தூரி என அனைத்து வகையான சைவ, அசைவ உணவுகளுமே கிடைக்கும். இத்தனை வெரைட்டி உணவுகளையும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையிலும், ஆரோக்கியமாகவும் கொடுத்து வருகிறோம். நாமே ஒரு ஃபுட்டி என்பதாலும், பல உணவகங்களில் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது என்பதாலும் ஒரு உணவகத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி நடத்தக்கூடாது என எனக்கு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அதே நேரத்தில் சுவைக்கு இணையாக ஆரோக்கியமும் எந்த அளவு முக்கியமென தெரிந்திருப்பதால் ஒவ்வொரு உணவுத் தயாரிப்பின்போதும் தனிக்கவனம் எடுத்து செயல்படுகிறேன்.
முக்கியமாக இங்கு குழந்தைகள் விரும்பும் உணவுகள் நிறைய இருக்கின்றன. குடும்பத்தோடு வந்து சாப்பிடும் வகையில் பல ஃபேமிலி காம்போக்கள் இருக்கின்றன. ஆயிரம் ரூபாய்க்கு ஒரு காம்போ இருக்கிறது. இந்தக் காம்போவில் 10 வகையான நான்வெஜ் டிஷ் இருக்கிறது. பிரியாணி, தந்தூரி, சிக்கன் லாலிபாப், நூடுல்ஸ், செஸ்வான் நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ், செஸ்வான் ப்ரைடு ரைஸ், நான், பனீர் கிரேவி இதோடு சேர்ந்து இன்னும் இரண்டு வகையான சிக்கன் சைடிஷ் என கொடுக்கிறோம். அதாவது ஒரு குடும்பத்தோடு சாப்பிட வருகிறவர்கள் குழந்தைகளுக்கு ஒரு உணவும், பெரியவர்களுக்கு ஒரு உணவும் தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக இந்த ஒரு காம்போவை ஆர்டர் செய்தால் மொத்தமாக எல்லாரும் சாப்பிடலாம்.அதேபோல, நமது கடையில் ஹைதராபாத் கெபாப் பிரியாணி என ஒன்றை அறிமுகப் படுத்தி இருக்கிறோம். இந்த பிரியாணியை 4ல் இருந்து 5 பேர் வரை சாப்பிடலாம். நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட வருபவர்கள் இந்த பிரியாணியை ஆர்டர் செய்தால் அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். இந்த பிரியாணியில் இருக்கிற சிக்கன் பீஸ் போக கூடுதலாக ஒரு முழு தந்தூரியைத் தருகிறோம். குரூப்பாக சாப்பிட வருபவர்கள் இந்த பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.
சிக்னேச்சர் டிஷ்சஸ் ஆன டைகர் கிரிஸ்பி ப்ரான், டைகர் ப்ரான் தவா ப்ரை, சிக்கன் விங்ஸ், தந்தூரி மஞ்ஜூரியர் என கொடுக்கிறோம். ரூ.160க்கு 4 வகையான காம்போக்கள் இருக்கின்றன. உணவுக்கான பொருட்கள் வாங்கப்படுவதில் இருந்து உணவுகள் தயாரிக்கப்படுவது வரை அனைத்திலுமே கூடவே இருந்து ஒவ்வொரு விசயத்தையும் தரமாக செய்து வருகிறேன். அதனால்தான் வாடிக்கையாளர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு சாப்பிட வருபவர்கள் என்ன மாதிரி பிரியாணி கேட்கிறார்களோ, அதை அவர்களுக்கு பிடித்த மாதிரியே வழங்குகிறோம். சிக்கன், மட்டன், தந்தூரி, 65 பிரியாணி, கெபாப் பிரியாணி என எது கேட்டாலும் கொடுக்கிறோம். அதேபோல, மட்டன், சிக்கன், கடல் உணவுகள் என அனைத்திலுமே பல வெரைட்டிகள் இருக்கின்றன. காலை 12 மணிக்கு தொடங்குகிற இந்த உணவகத்தில் இரவு 11 மணி வரை மேற்சொன்ன உணவுகள் அனைத்துமே கிடைக்கும். பணம் ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது. குறைவாக இருந்தாலும் நிறைவாக எல்லாரும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கில்தான் இப்படி காம்போக்கள் கொடுத்து வருகிறேன். பிடித்த உணவுகளை சாப்பிட பணம் ஒரு விசயமாக இருக்கக்கூடாது என்பதால் இதனைக் கொடுத்து வருகிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெயக்குமார்.
ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
பட்டர் இறால் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்
பட்டர்- 1 கப்.
இறால் – 250 கிராம்.
முட்டை – 4.
பெரிய வெங்காயம் – 2.
தக்காளி – 2.
பட்டை – 2.
கிராம்பு – 3.
பிரிஞ்சி இலை – 2.
சோம்பு – 1 ஸ்பூன்.
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்.
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்.
உப்பு – தேவைக்கேற்ப.
கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை:
முதலில் இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை வேக வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி. பின்பு இறாலைச் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். மசாலா நன்றாக திக்கானதும் அதனுடன் பட்டர் மற்றும் வேகவைத்த முட்டைகளைக் குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும். இப்போது சூடான பட்டர் இறால் முட்டை மசாலா தயார்.