திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:திருப்பதியில் தற்போது உள்ள உணவு கவுன்டர்கள் இரட்டிப்பாக அமைக்கப்பட்டுள்ளது. லட்டு பிரசாதம் சுவை, தரம் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனையில் லட்டு பிரசாதம் தரம் மற்றும் சுவை குறைவதற்கு காரணம் அதில் பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்கள் மற்றும் நெய் தரம் குறைந்து வருவது காரணம் என்பது தெரியவந்தது.
தேவஸ்தானத்தில் லட்டு மற்றும் அன்னப்பிரசாதம் தயாரிக்க ரூ.500 கோடிக்கு மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நெய்க்கு மட்டும் ரூ.250 கோடிக்கு மேல் செலவு செய்யப்படுகிறது. எனவே உணவு மூலப்பொருட்கள் மற்றும் நெய் தரத்தை கூட்டுவதற்காக நிரந்தரமாக ஆய்வகம் உள்ளது. மேலும் தரமில்லாத பொருட்கள் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் (எப்எஸ்எஸ்ஏஐ) மத்திய அரசின் உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் திருமலையில் ஆய்வகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.