கோடைக்குக் கொடையாகும் பழங்களும் பயன்களும்!

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பானது. போதுமான அளவு தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். இதனால் சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.உடலில் உள்ள நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு அதிக அளவு பழங்களை சாப்பிடுவது மிகச் சிறந்த வழியாகும். எந்த வகைப் பழங்களை சாப்பிடலாம் என்று இங்கே காண்போம்.

அன்னாசிப் பழம்: நாவறட்சியை குறைக்கக்கூடிய ஆற்றல் அன்னாசிப்பழச்சாறுக்கு உள்ளது. நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது
அன்னாசிப் பழம்.

சிட்ரஸ் வகை பழங்கள்: திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சைப் பழச்சாறு, நெல்லிக்கனி போன்ற சிட்ரஸ் வகை பழங்களை சாப்பிடுவது சிறந்த வழியாகும். இந்த வகைப் பழங்களை சாறாகவும் பருகலாம். இதன் மூலம் வெயிலால் ஏற்படும் சோர்வு நீங்குவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.

தர்பூசணி: தர்பூசணியில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய நீர்பற்றாக்குறை உடனே ஈடு செய்யப்படும்.

முலாம்பழம்: கோடைக்கு ஏற்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்களில் முலாம் பழமும் ஒன்று. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவு காணப்படுகின்றன. வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிடலாம்.

மேலும் சப்போட்டா, மாம்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும். இதன் மூலம் உடலில் ஆண்டி ஆக்சிடெட்களின் அளவு அதிகரிக்கும். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கி பருகுவதைவிட பழமாக சாப்பிடுவது சிறந்தது. முடிந்தவரை பழங்களை கடித்து சாப்பிட குழந்தைகளை பழக்குங்கள். இதன் மூலம் நார்ச் சத்து உடலுக்கு முழுமையாக கிடைப்பதோடு, செரிமானக் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
– அ.ப. ஜெயபால்

Related posts

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல்!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது