தற்போது இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலான 15 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க இதுவரை (28.06.24 வரை) தென் ஆப்ரிக்கா, உகாண்டா, பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை ஆகிய பதினொரு நாடுகளைச் சேர்ந்த 107 அயலகத் தமிழ் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று தமிழ்நாடு வரும் அயலகத் தமிழ் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தொல்லியல் துறை உள்ளிட்ட பல துகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.