கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மது பாட்டிலுடன் அடுத்தடுத்த நாளில் இறந்து கிடந்த நண்பர்களால் தைலாவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் விஜயகாந்த் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (60), கொத்தனார். இவரது நண்பர் தைலாவரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்து (62). வெல்டர். இவர்கள் இருவரும் தினந்தோறும் தாங்கள், கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வல்லாஞ்சேரியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானம் அருந்துவது வழக்கம். இந்நிலையில், கடந்த 1ம் தேதி இரவு லட்சுமணன் மதுபானம் அருந்திவிட்டு மேலும் ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் குவாட்டர் பாட்டிலில் இருந்த மதுபானத்தை பாதி அளவு குடித்துவிட்டு மீதியை அவரது அருகில் வைத்து விட்டு தூங்கி உள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவர் நாக்கு வறண்டும், காது, மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வடிந்தபடி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரது சடலத்தை நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இதேபோல், லட்சுமணனின் நண்பரான முத்து 2ம் தேதி இரவு மதுபானம் அருந்திவிட்டு மேலும் ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், குவாட்டர் பாட்டிலில் இருந்த மதுபானத்தை பாதி அளவு குடித்துவிட்டு மீதியை அவரது அருகில் வைத்து விட்டு தூங்கி உள்ளார். அப்போது நள்ளிரவில் காது, மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வடிந்தபடி இறந்து கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.