டெல்லி: பணமோசடியில் ஈடுபட்ட பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் ரூ. 54 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. பொதுமக்களிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் மோசடி செய்த ரோஸ் வேலி குழுமத்தின் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ரோஸ் வேலி குழுமத் தலைவர் கவுதம் குண்டு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கவுதம் குண்டு இன்னும் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் ரோஸ் வேலி குழுமத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அதன்படி தற்போது ரூ .54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் நேற்று முடக்கியது. இந்த வழக்கில் இதுவரை முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.1,171 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், அவை ரோஸ் வேலி குழுமத் தலைவர் கவுதம் குண்டு மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள காப்பீட்டு பாலிசிகள் மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பீகாரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மனைகள் ஆகியன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.