இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநரிடம் ரூ.300 கட்டணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுநர் புகார் தராத நிலையில், தாக்கிய நபர் மீது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில் அண்மைக் காலமாக விதிகளை மீறி பேருந்து, வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது இந்த ஒப்பந்த நிறுவனத்தின் கட்டண வசூல் அனுமதி காலம் நிறைவடைந்த பிறகும் வசூலித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநகராட்சி அறிவுறுத்தியவாறு, கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு பலகை மெரினா வாகன நிறுத்துமிடம் எங்கும் ஒரு இடத்தில் கூட வைக்கப்படவே இல்லை.
இதனால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி ரத்து செய்தது. ஆனால், அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாநகராட்சியின் ஒப்பந்த ரத்துக்கு தடை பெற்று, மீண்டும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், ‘தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என சமீபத்தில் நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம். புதிய டெண்டர் விடும்வரை மெரினா,பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டிபஜாரில் இலவசமாக வாகனங்களை பொது மக்கள் நிறுத்தி கொள்ளலாம். மீறி, ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் கேட்டால், சம்பந்தப்பட்ட வர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம். மெரினாவில் அதுபோன்று கட்டணம் வசூலித்தவர்கள் குறித்து அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.