மதுராந்தகம் : அச்சிறுப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து விலை உயர்ந்த மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள கடமலைபுத்தூர் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுபானக் கடை ஊழியர்கள் விற்பனை முடிந்து கடையை மூடி விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள் மின்சாரத்தை துண்டித்து கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மதுபானக் கடை பூட்டையில் திருட்ட சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் டாஸ்மாக் கடையிலிருந்த பணம் வைக்கும் இரும்பு லாக்கரை உடைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் பணம் தப்பியது. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.