வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது செல்போனுக்கு டிராயில் இருந்து பேசுவதாகவும், உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் மும்பை சிபிஐ அதிகாரிகள் ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்வார்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் எனக்கூறி ஸ்கைப் மூலம், அவரை தொடர்பு கொண்டு, கைது நடவடிக்கையை தவிர்க்க அதிகாரிகள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பி பல்வேறு தவணையாக ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்து 750 அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மோசடி என தெரிந்து சைபர் கிரைம் உதவி எண் 1930ல் புகார் அளித்தார்.