புதுடெல்லி: மோசடி கடன் ஆப்களின் விளம்பரங்களை டிஜிட்டல் தளங்கள் அனுமதிக்கக்கூடாது என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றின் இடையே எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,‘‘சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மோசடி கடன் ஆப்களின் விளம்பரங்களை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த விளம்பரங்கள் இணையத்தை பயன்படுத்தும் பொது மக்களை தவறாக வழிநடத்துவதோடு, அவர்களை சுரண்டி பணம் பறிக்கிறது. எனவே மோசடி கடன் ஆப்களின் விளம்பரங்களை எந்த இடைதரகரும் கொண்டு செலல முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற விளம்பரங்களை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது” என்றார்.