சேலம் மாவட்டம் வலசையூரைச் சேர்ந்த சபரி சங்கர் என்பவர், தருமபுரி, அரூர், சேலம், திருச்சி, நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 கிளைகளை தொடங்கியுள்ளார். பொங்கும் தங்கம் என்ற பெயரில் தீபாவளி நகைச் சீட்டும், அதேபோல் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் தருவது உள்ளிட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களிடம் சபரி சங்கர் பணத்தை வசூலித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி அன்று மொத்தம் இருந்த 11 கடைகளையும் மூடிவிட்டு சபரி சங்கர் தலைமறைவாகியுள்ளார். அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 1000-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து சபரி சங்கரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்த நிலையில், பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த சபரி சங்கரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சபரி சங்கரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அவரை கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லவுள்ளனர்.