சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரை சேர்ந்த கோட்டை அமீரின் பெயரால் ‘‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’’ ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால், குடியரசு தினவிழாவின் போது வழங்கப்படுகிறது. அதேபோல், விருது பெறுவோருக்கு ரூ.25,000க்கான காசோலை, பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மேலும், மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பதக்கத்தினை பெற தகுதியுடையவராவர். எனவே, ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது www.awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு வரும் டிச.15ம் தேதிக்கு முன்பாக அனுப்பும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.