சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: இடதுசாரி இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யாஜீ மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது மாநிலத்துக்கும் நாட்டுக்கும் அவர் காட்டிய மாறாத அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் நினைவுகூரப்படும். ஓர் உறுதியான மார்க்சியவாதியாக, சமத்துவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்கவும் – விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் – சமூகநீதிக்காக குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டார். அவரது தலைமைத்துவமும், மக்கள் மீதான உறுதிப்பாடும் வருங்கால தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தோழருக்கு செவ்வணக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.