‘‘டாஸ்மாக் குடோனில் கட்டுக்கட்டா சிக்கிய பணத்தை பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறையினரே மலைத்து போயிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘முத்து மாவட்டத்தில் முத்து தான் கிடைக்கும்.. ஆனால் கட்டுக் கட்டாக பணமாம்.. அதாவது அங்குள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை அள்ளினார்களாம்.. அங்கு லஞ்சம் கொழிப்பதாக ஏகப்பட்ட புகார்கள்.. இதை பொரி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை நேரம் பார்த்து காத்திருந்தாங்க.. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமையில் உள்ளே புகுந்து சோதனை நடத்தியிருக்காங்க.. அப்போது கணக்கில் வராத பணம் ஊழியர்களிடம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரே மலைத்துப் போயிட்டாங்களாம்.. இவ்வளவு பணம் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எப்படி வந்தது, மதுக்கடைகளிடம் வசூல் பணமா…
ஒரு நாள் வசூலா லட்சத்தை தாண்டுகிறதுனு லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கே அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்திருக்கு.. இந்த பணத்துடன் ரெண்டு பேர் வசமாக சிக்கியுள்ளனராம்.. அவர்களிடம் இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என துருவி துருவி இரவு வரை விசாரணை நீண்டதாம்.. விசாரணைக்கு பயந்து பல அதிகாரிகள் எஸ்கேப் ஆகி விட்டார்களாம்.. யார் தலை உருளுமோ என டாஸ்மாக் வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொங்கு மண்டலத்தை சேர்ந்த தாமரைக்கட்சி, இலைக்கட்சி நிர்வாகிங்க, தொண்டர்கள் திடீர்னு கடும் வாட்டத்தில் இருக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 15 மாதங்களுக்கு அப்புறம் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துட்டாரு.. இது, திமுக தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்குது..
குறிப்பாக, அவரது சொந்த மாவட்டமான கரூர், பொறுப்பு அமைச்சராக பதவி வகித்த வகையில், கோவை மாவட்டம் என இரு மாவட்ட திமுக தொண்டர்களும் ரொம்பவே குஷியாக இருக்கிறாங்களாம்.. ஆனால், கோவை மாவட்டத்தை சேர்ந்த இலைக்கட்சி மற்றும் தாமரை கட்சி தொண்டர்களுக்கு பெரும் ‘கிலி’ ஏற்பட்டிருக்காம்… எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலில் மேற்கு மண்டலத்தில் இவர், கடும் சவாலாக இருப்பார்னு இலையும், தாமரையும் கடும் வாட்டத்தில் உள்ளார்களாம்.. காரணம், இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 97 வார்டில் கவுன்சிலர்களை ஜெயிக்க வைத்தாரு… கொங்கு மண்டலம் எங்களது கோட்டை என மார்தட்டிய இலைக்கட்சிக்கு 100க்கு வெறும் 3 வார்டு மட்டுமே கிடைச்சது… தாமரை கட்சிக்கு ‘ஜீரோ’ மார்க்.
இத்தேர்தலில், கடும் நெருக்கடி கொடுத்து திமுக கூட்டணி மொத்தமாக சுருட்டியதால், ரெண்டு கட்சியினரும், அடுத்த தேர்தலில் எப்படி ‘மூவ்’ செய்வதுனு தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாங்களாம்.. குறிப்பாக, தாமரை கட்சி சிட்டிங் பெண் எம்எல்ஏ, மாஜி இலைக்கட்சி அமைச்சர் ஒருவர் என இருவரும் ரொம்பவே கலக்கத்தில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் மாஜி அமைச்சர் அப்செட்டில் இருக்கிறாராம் தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சரான கர்மவீரர் பெயர் கொண்டவர் தற்போது சைலன்டாக இருந்து வருகிறாராம்… கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சி நடந்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டது..
தற்போது, மீண்டும் அவர்களை கட்சியில் இணைக்க முடியாதுன்னு சேலத்துக்காரர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்… இதற்கான முயற்சி எடுத்த மாஜி அமைச்சர் கடும் அப்செட்டில் இருந்து வர்றாராம்.. கட்சி நிர்வாகிகளை கூட சந்திப்பது இல்லையாம்.. தன்னுடைய சொந்த வேலைகளை மட்டுமே கவனித்து வருகிறாராம்… சைலன்டாக இருப்பதன் மூலம், மாஜி அமைச்சர் என்ன சொல்ல வருகிறார் என்ற கேள்வியும் எழுந்துருக்கு.. அமைதிக்கு பின்னால் வேறு ஏதாவது அதிரடி வைத்துள்ளாரா எனவும் கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுச்சேரியில் போட்டி புல்லட்சாமி உருவாகி வருகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் அரசியலை அதிர வைக்கும் புல்லட்சாமியாக ரங்கா உலா வருகிறார். புதிய கட்சி தொடங்கிய ஓரிரு மாதத்திலேயே ஆட்சியை பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெருமை ரங்காவுக்கு உண்டு..
மக்கள் செல்வாக்குமிக்கவரா அரசியலில் ரங்கா உலாவரும் நிலையில் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் வடமாநில ஐபிஎஸ் அதிகாரியான பிரியமான அந்த குமார் புதுச்சேரிக்குள் சமீபகாலமாக போட்டி புல்லட்சாமியாக உலாவந்து அனைவரையும் அதிர வைத்து வருகிறாராம்.. நேற்று கூட புதுச்சேரி, துறைமுகத்தை ஒட்டிய பிரதான சாலையில் அதிக சைலன்சர் சத்தத்துடன் உயர்ரக புல்லட்டில் உலா வர அவ்வழியாக பயணித்த அனைவரும் ஒருவித அச்சத்தில் உறைந்திருக்காங்க.. அதாவது அந்த பிரியமான குமாருக்கு முன்பும் பின்பும் 3, 4 மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் சில கீழ்மட்ட காக்கிகளும் அதே வேகத்துடன் ஈடுகொடுத்து பயணித்தாங்களாம்..
இதுவரை எந்தவொரு அதிகாரியும் இத்தகைய அலப்பறையுடன் சென்றதில்லைன்னு புலம்பும் புதுச்சேரிவாசிகள் சட்டத்தை மதிக்க வேண்டிய காக்கி உயர் அதிகாரியே இத்தகைய அடாவடியோடு சாலையில் சென்றால் மக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்னு வேதனையுடன் குமுறினாங்களாம்.. நகர பகுதியில் சமீபகாலமாக அதிகளவில் விபத்துகள் நடப்பதை சுட்டிக்காட்டும் டிராபிக் காக்கிகளே அதிகாரியின் புதிய புல்லட்சாமி பற்றி புலம்புவதுதான் புதுச்சேரியின் இன்றைய ஹைலெட்’’ என்கிறார் விக்கியானந்தா.