சண்டிகர்: பிரபல தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்தார் அன்சாரி கடந்த 2019 ஜனவரி முதல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ரூப்நகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உ.பி. காவல்துறை அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி பஞ்சாப் அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியது. ஆனால் பஞ்சாப் அரசு அவரை ஒப்படைக்கவில்லை. இதை எதிர்த்து உ.பி. காவல்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.இந்த வழக்கிற்காக பஞ்சாப் அரசின் கருவூலத்தில் இருந்து ரூ.55 லட்சம் செலவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தனது டிவிட்டரில், ‘’பஞ்சாப் அரசு அன்சாரிக்காக சிறையில் இருக்கும் போது செலவிட்ட ரூ.55 லட்சத்தை அப்போதைய காங்கிரஸ் முதல்வரும் (தற்போது பாஜ தலைவர்) அமரீந்தர் சிங் தர வேண்டும். அந்த பணத்தை அமரீந்தர் தரவில்லை என்றால், அப்போது சிறைத் துறை அமைச்சராக இருந்த சுக்விந்தர் சிங் செலுத்த வேண்டும். தவறினால், அவரது ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்,’’ என்று கூறியுள்ளார்.