பெரம்பலூர்: பெரம்பலூரில் கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிய கள்ளக்காதலன் போலீசுக்கு பயந்து சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு, இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி மகாலட்சுமியும் (28), திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த சிந்துஜாவும் நெருங்கிய தோழிகள். அதனால் சிந்துஜா வீட்டுக்கு மகாலட்சுமி அடிக்கடி வருவார். இந்நிலையில் ஓராண்டுக்கு முன் மகாலட்சுமிக்கும் சிந்துஜாவின் கணவரான தொழிலாளி நாகராஜுக்கும் (37) கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென நாகராஜுடன் பேசுவதை மகாலட்சுமி நிறுத்தியுள்ளார். அப்போதுதான் வேறு ஒருவருடன் மகாலட்சுமி பேசுவது நாகராஜுக்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்தார்.
இந்நிலையில் நேற்று நாகராஜ், சிந்துஜாவை அழைத்து கொண்டு சிறுவாச்சூர் கோயிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்ததும், மகாலட்சுமியை பார்த்து விட்டு வர முடிவு செய்தனர். இதையடுத்து பூ வாங்கி கொண்டு இரவு மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்றனர். அப்போது நாகராஜ், ‘டேங்க் கவரில் உள்ள பூவை எடுத்து கொண்டு வா’ என்று சிந்துஜாவிடம் கூறியுள்ளார். சிந்துஜா பூவை எடுக்க வெளியே சென்றபோது, திடீரென நாகராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகாலட்சுமியின் வலது கை, தோள்பட்டை, வலது பக்க காது உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். பூ எடுத்துக்கொண்டு உள்ளே வந்த சிந்துஜா அதிர்ச்சியடைந்து கதறினார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, ரத்த வெள்ளத்தில் துடித்த மகாலட்சுமியை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாகராஜ், உள்பக்கமாக தாழிட்டு வீட்டுக்குள் இருந்தார்.
தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்து கதவை தட்டி நாகராஜை வெளியே வருமாறு கூறினர். அவர் கதவை திறக்க மறுத்ததால் கதவை உடைத்து திறப்போம் என போலீசார் கூறினர். இதனால் பயத்தில் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, தீயை பற்ற வைத்துள்ளார். திடீரென தீப்பற்றியதால் நாகராஜிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அலறி துடித்தார். உடனடியாக போலீசார் கதவை உடைத்து புகுந்து தண்ணீர் ஊற்றி சிலிண்டரை அணைத்தனர். பிறகு நாகராஜுவை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாகராஜ் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.