இம்பால்: ‘கடந்த 1961ம் ஆண்டுக்குப் பிறகு மணிப்பூரில் குடியேறிய வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்’ என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பேசியது குறித்து நிபுணர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இனக்கலவரம் நீடித்து வருகிறது. அண்டை நாடான மியான்மரில் இருந்து குடியேறியவர்களில் ஒரு பகுதியினர்தான் பிரச்னையை தூண்டுவதாக அம்மாநில பாஜ அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேற்று முன்தினம் இம்பாலில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘1961ம் ஆண்டுக்குப் பிறகு மாநிலத்தில் நுழைந்து குடியேறிய வெளிநாட்டவர்கள் சாதி, சமூக வேறுபாடின்றி அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார். மணிப்பூரில் வசிப்பவர்களின் பூர்வீக நிலையை நிர்ணயிக்க அடிப்படை ஆண்டாக 1961ம் ஆண்டை ஏற்பதாக கடந்த 2022ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் 1961ம் ஆண்டுக்குப் பிறகு வந்தவர்களை அடையாளம் காண மணிப்பூர் அரசு முயற்சிக்கிறது. ஆனால் சம்மந்தப்பட்ட வெளிநாடுகள் ஏற்காத வரை யாரையும் நாடு கடத்துவது சாத்தியமில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி உள்ளனர்.