சென்னை: சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ெசன்னையில் நேற்று நடந்த மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வந்திருந்தனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெறும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஆண்டுதோறும் 28 கோடி பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வருகின்றனர். அதில் 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவிற்கு மட்டும் வருகின்றனர். தமிழகத்தில் சிறந்த மருத்துவம், குறைந்த விலையில் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான, தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டு கையேட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த கையேட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் இடைத்தரகர்களின் தயவு இல்லாமல் பிற நாட்டை சேர்ந்த மருத்துவ சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் எந்த மருத்துவமனையில், எவ்வளவு கட்டணத்தில் சிகிச்சை பெறலாம் என்ற தகவலை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.