அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்து மொத்த கொள்முதல் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த அக்டோபர் 18ம் தேதி சென்னை பார்க் டவுன் பகுதியில் உள்ள மருந்துகள் மொத்த கொள்முதல் செய்யும் கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலை, தலைமை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நடந்த சோதனையில் கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.70 கோடிக்கான ஆவணங்கள் மற்றும் 3 கிலோ தங்க நகைகள் ரூ.1.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தங்க நகைகள், ரொக்க பணம் குறித்து கணக்கு வழக்குகளை உரிய நேரத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கன்வர்லால் குழுமத்திற்கு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், சொன்னபடி கன்வர்லால் குழுமம் சார்பில் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கன்வர்லால் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று 2வது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், கிண்டியில் தொழிற்சாலை நடத்தி வரும் பீட்டர் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை மற்றும் கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு வரை சோதனை நடத்தினர். சென்னை அபிராமபுரம் 3வது தெருவை சேர்ந்த டாக்டர் சுந்தர் என்பவரின் வீட்டில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். டாக்டர் சுந்தர் எம்ஜிஎம் குழுமத்தின் உறவினர் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவல்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. இருந்தாலும், வரி ஏய்ப்புக்கான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.