உணவே மருந்து!

* ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்பவன் ரோகி. எனவே அளவறிந்து உண். பசித்துப் புசி என்ற பழமொழிகள் எல்லாம் உடலை நோயில் இருந்து காக்க கூறப்பட்டவை. அளவுக்கு மீறி உண்பது, அரிசியுடன் இறைச்சி, நெய் உண்ட உடலுக்கு மந்தம் தரும் உணவுகளை தொடர்ந்து அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
* பொதுவாக, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காத நிலையில் கண்பார்வை குறைவு, கால்களில் ஆறாத புண் என்று பல பாதிப்புகள் தொடர்ந்து விடும். சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துகள் குறைந்து விடும். எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
* நீரிழிவுநோயை எளிதில் கட்டுப்படுத்த எளிய மருந்துகளையும் சொல்கின்றனர் சித்த மருத்துவர்கள். நாவல் மரத்தின் பட்டையை ஒரு நாள் முழுவதும் இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் இந்த நீரை அருந்தினால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
* நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதே போல் ஆவாரம் பூ, சுக்குடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக சாப்பிடலாம். இது எளிய முறை. பொதுவாக சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வதே பாதுகாப்பானது.
– அ.ப.ஜெயபால்

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்