மாணவர்களை ஈர்க்கும் பார்பிக்யூ வெரைட்டிகள்!
“உணவகம் தொடங்குவதற்கு பெரிய அளவுக்கும் இடம் வேண்டுமே! பொருளாதாரம் வேண்டுமே! என எண்ணி ஐயம் கொள்ள வேண்டாம். நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தாலே போதும். உணவகம் என்ன? அனைத்துத் துறைகளிலும் சாதிக்கலாம் ‘‘என நம்பிக்கை வார்த்தைகளுடன் பேசத்துவங்குகிறார் ரஹிமா. சென்னை முகப்பேரில் இவர் நடத்தி வரும் தி பெட்டிட் செஃப் உணவகம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த டேஸ்ட் ஸ்பாட்டாக மாறி இருக்கிறது. ஃபுட் ட்ரக்கில் ஆரம்பித்த இவரது உணவகப் பயணம் தற்போது ஓட்டலாக பரிமாணம் அடைந்திருக்கிறது. தனது உணவகம் குறித்து நம்மிடம் மேலும் பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார் ரஹிமா.
“சென்னைதான் எனக்கு சொந்த ஊரு. எம்சிஏ படித்து விட்டு கொஞ்ச காலம் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பள்ளியில் படிக்கும்போதே என் தம்பி முஹமது அபுபக்கர், தங்கை ஹூசைன் பானு இருவருக்கும் உணவகம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இதனால் படித்து முடித்துவிட்டு மூன்று பேரும் வேலைக்குச் சென்றபின் பணம் சேர்த்து பெட்டிட் செஃப் என்ற ஃபுட் ட்ரக்கை கடந்த 2018ம் ஆண்டில் தொடங்கினோம். சென்னை நொளம்பூரில் இன்றைக்கும் அந்த ஃபுட் ட்ரக் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. துவங்கிய கொஞ்ச நாளிலேயே கொரோனா பெருந்தொற்று வந்ததால் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தோம். மூவரும் பணிக்குச் சென்றதால் பெரிதாக பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. கொரோனாவிற்கு பிறகு ஃபுட் ட்ரக்கை மீண்டும் இயக்கத் தொடங்கினோம். சிக்கன் டிக்கா, ஃப்ரைடு ரைஸ் என அனைத்து டிஷ்களும் ருசியாக இருந்ததால் தொடர் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். இதில் கிடைத்த வருமானம், எனது கணவர் வினோத் கொடுத்த நம்பிக்கையில் சென்னை முகப்பேரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தி பெட்டிட் செஃப் உணவகத்தைத் தொடங்கினேன். உணவகம் நடத்துவதற்கு முன் அனுபவமோ, போதிய பொருளாதாரமோ என்னிடம் இல்லை. சிறிய அளவில் நமக்குத் தெரிந்த உணவுகளை மட்டுமே கொடுத்து உணவகம் தொடங்கலாமென முடிவெடுத்தேன்.
இதனால் இந்த ஃபுட் ட்ரக்கை சிறிய அளவில் ஆரம்பித்து எனக்கு என்னவெல்லாம் சமைக்கத் தெரியுமோ அதனை மட்டும் வீட்டுமுறை சாப்பாடு போல இங்கு கொடுத்து வந்தேன். படிப்படியாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கி இரண்டரை வருடத்தில் இந்தப் பகுதியின் லேண்ட் மார்க்காகவே இந்த தி பெட்டிட் ஃபுட் ட்ரக் மாறி இருக்கிறது. உணவகம் தொடங்கிய புதிதில் ஃப்ரைடு ரைஸ்கள் மட்டுமே கொடுத்து வந்தேன். ஃபுட் ட்ரக்கில் இடம் குறைவாக இருப்பதால் எங்களால் அதிகப்படியான டிஷ்களைக் கொடுக்க முடியவில்லை. இந்த உணவகம் தொடங்கியதில் இருந்து ஹல்பாமா, பெப்பர் சிக்கன், நான், பனீர் டிக்கா, சிக்கன் டிக்கா கொடுத்து வருகிறோம். நமது கிராமத்தில் எல்லாம் மீன் பிடித்து ஆற்றங்கரைகளில் தீ மூட்டி சுட்டுத் தின்பதை இப்போது பார்பிக்யூ என்று எல்லா விதமான கறி வகைகளையும் வைத்துக் கொடுக்கிறார்கள். அதைத்தான் நாங்கள் சிக்கனில் கொடுக்கிறோம். பார்பிக்யூவை பொருத்த வரையில் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு சிக்கன் மசாலாவில் நன்கு ஊற வேண்டும்.
அப்போதுதான் அதன் ருசி வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது போல் வரும். உணவகத்தைப் பொருத்தவரைக்கும் அன்றைக்கு என்ன வியாபாரம் ஆகுமோ அதை மட்டுமே அளவாக வாங்கி வந்து உணவுகளை தயார் செய்வோம். புரட்டாசி, கார்த்திகையில் அதிகம் அசைவம் சாப்பிடமாட்டார்கள். இதனால் சைவ உணவினை அதிகமாக வாங்கி வந்து தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம். மற்ற சமயங்களில் அசைவ உணவுகளில் அசத்துவோம். கிரில், தந்தூரி, சவர்மா, ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் என பல வகையான வெரைட்டிகளும் கொடுத்து வருகிறோம். பல இடங்களில் ஃப்ரைட் ரைஸ் இருந்தாலும் நமது கடையில் கிடைக்கும் ஃப்ரைட் ரைஸ் ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொன்றையும் தனித்துவமான சுவையில் கொடுத்து வருகிறோம். புதிதாக உணவுகளைத் தேடிச் சாப்பிட நினைப்பவர்கள் நமது கடைக்கு வருகிறார்கள். உணவின் சுவையையும் தரத்தையும் பார்த்துவிட்டு மீண்டும் நண்பர்களோடு வந்து சாப்பிடுகிறார்கள். அந்தளவிற்கு நமது உணவுகளின் ருசி அனைவருக்கும் பிடிக்கும்.
மதியம் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10:30 வரை செயல்படுகிற நமது உணவகத்திற்கு தினசரி ரெகுலர் வாடிக்கையாளர்கள் அதிகளவில் உருவாகி இருக்கிறார்கள். ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனி மசாலாக்களை, தனித்தனி சுவையில் சேர்க்கிறோம். எங்கள் உணவகத்தின் சிக்னேச்சர் டிஷ் என்றால் அது பார்பிக்யூ வெரைட்டிஸ்தான். இதுபோக காம்போவிற்கு எங்களது உணவகத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிட்டு செல்கிறார்கள். எந்தவொரு தொழில் செய்தாலும் அதில் நிறை, குறைகள் இருக்கும். குறிப்பாக உணவுகளைப் பொருத்தவரையில் ருசி நன்றாக இருந்தால் மட்டுமே தொடர் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
எங்களது உணவில் கஸ்டமர்ஸ் எதாவது குறை சொன்னால் அதை நாங்கள் முழு மனதாக ஏற்றுக்கொள்வோம். மீண்டும் அந்த ரெசிபியை தயார் செய்து வாடிக்கையாளர்களிடம் கொடுத்து ருசி பார்க்கச் சொல்வோம். அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி. அவர்கள் நேர்மறையான கருத்து தெரிவித்தால் மட்டுமே மீண்டும் அதை உணவகத்தில் வைப்போம். உணவகம் என்றால் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். அதனால் இரவு வியாபாரம் முடிந்த பிறகு ட்ரக்கை நன்கு சுத்தம் செய்த பின்பே செட்டுக்கு எடுத்துச் செல்வோம். காலையில் முதல் வேலையாக ட்ரக்கை திறந்து வைத்து விடுவோம். இதனால் கெட்டக் காற்று வெளியேறும். ட்ரக்கிலும் கெட்ட வாடை வராது. உணவகத்திலும் அதேபோல்தான் இரவு உணவகம் மூடுவதற்கு முன்பு அனைத்தையும் சுத்தம் செய்து விடுவோம்.
– விவேக்
படங்கள்:கிருஷ்ணமூர்த்தி