நீங்க ஒரு பரோட்டா வாங்குனா நாங்க 6 வகையான குழம்பு தருவோம் என அன்லிமிட் குழம்பு தருகிறது வேளச்சேரி தன்சி நகரில் அமைந்துள்ள திருநெல்வேலி பரோட்டா கடை. சென்னையில் எந்த ஒரு உணவகத்திற்கு சென்றாலும் அங்கு ஒரு பரோட்டா வாங்கினால் ஒரு சால்னா அல்லது இரண்டு சால்னா தருவார்கள். ஆனால் இந்த உணவகத்தில் சிக்கன், மட்டன், வெஜ் குருமா என 5 க்கும் மேற்பட்ட குழம்பு தருகிறார்கள். இங்கு பரோட்டா சாப்பிடுவதற்கு மாலை ஆறு மணி முதல் வாடிக்கையாளர்கள் கடைக்கு வெளியிலேயே காத்துக் கிடக்கின்றனர். முழுக்க முழுக்க தென்மாவட்ட ஸ்டைல் குழம்பு என்பதால் காத்திருந்து நம்ம ஃபுட்டிகள் ஒரு பிடி பிடிக்கிறார்கள். இரவு நேரத்தில் மக்களின் கூட்டம் அலைமோதும் பகுதிகள் என்றால் அது பஸ் ஸ்டேண்டும் ரெயில்வே ஸ்டேஷனும்தான்.
இதுபோக சென்னையில் பல பகுதிகளில் உணவகங்களிலும் கூட்டம் அலைமோத தொடங்கி இருக்கிறது. தூங்கா நகரான மதுரைக்குப் பிறகு சென்னையில் இரவு நேரத்தில் சுவையான உணவுகளைச் சாப்பிட மக்கள் படையெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இரவு 10 மணிக்கு மேல் மவுண்ட் ரோட்டில் பிலால் பன் பட்டர் ஜாம் சாப்பிட ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். ஒரு ப்ரட்டிற்குள் பட்டரையும், ஜாமையும் வைத்து சாப்பிடக் கொடுக்கிறார்கள். இதன் ருசி சாப்பிடுபவர்களின் வாயினைக் கட்டிப் போட்டுதான் வைக்கிறது.பல உணவகங்களில் இளநீர் பாயாசம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஒரு சில கடைகளில் மட்டுமே நம்மை இளநீர் பாயாசம் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அப்படி ஒரு இடம்தான் சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள க்ரெஸன்ட் உணவகம். இங்கு கிடைக்கும் இளநீர் பாயாசம் அவ்வளவு ஸ்பெஷல். இந்த உணவகத்திற்கு வந்து சாப்பிடுபவர்கள் இளநீர் பாயாசத்தை டேஸ்ட் பண்ண தவறுவது இல்லை. இளநீர் பாயாசத்திற்கு ஒரு நல்ல ஸ்பாட் என்றால் அது நிச்சயம் அண்ணாநகர் க்ரெஸன்ட்தான்.