Sunday, June 30, 2024
Home » சாலை விதிமுறைகளை பின்பற்றி சிறந்த குடிமகனாக வாழ வேண்டும்

சாலை விதிமுறைகளை பின்பற்றி சிறந்த குடிமகனாக வாழ வேண்டும்

by Lakshmipathi

*கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு

தூத்துக்குடி : சாலை விதிமுறைகளை பின்பற்றி சிறந்த குடிமகனாக வாழ வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த சாலை பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார். தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து பேசியதாவது: மாணவ- மாணவிகளாகிய நீங்கள்தான் வருங்கால இந்தியா.

எனவே சாலை விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சாலை பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். சாலை விதிகளை பின்பற்றாமல், ஹெல்மெட மற்றும் சீட் பெல்ட் அணியாமல் தினமும் ஏராளமானோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். நமது உயிர் மிகவும் உன்னதமானது. ஆனால் அதை சாலைகளில் இழக்கக்கூடாது. நாட்டுக்காக போரில் உயிரிழக்கலாம் அல்லது ஏதாவது ஆய்வு செய்து அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கலாம். ஒரு நல்ல காரியத்திற்காக உயிரிழக்கலாம்.

ஓட்டுநர் உரிமம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள்தான் பெற முடியும். எனவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டலாம். மற்ற வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னர்தான் ஓட்ட வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்துக்குள்ளானால் காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும். இதனால் படிப்பு பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் அரசு வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும். தனியார் துறையிலும் நன்னடத்தை சான்றிழ் கேட்பதால் தனியார் துறை வேலைவாய்ப்பு கிடைப்பதும் பாதிக்கப்படும். மேலும் 25 வயது வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது.

வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.
சாலை விதிகளை பின்பற்றி ஒரு சிறந்த குடிமகனாக வாழ வேண்டும். நீங்கள் எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வாகனங்களில் பாதுகாப்பாக செல்ல வேண்டும். உயிர் விலைமதிப்பு இல்லாதது. நீங்கள் பிறந்தது, நாட்டை ஆள்வதற்காகத்தான். உங்களைப்பற்றி பெற்றோர் நிறைய கனவுகள் வைத்திருக்கிறார்கள். உங்கள் நண்பர்களிடமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். சாலை பாதுகாப்பு உறுதிமொழியினை ஏற்று சிறந்த சாலை பாதுகாப்பு உள்ள தேசமாக இந்தியாவை மாற்றுவோம், என்றார்.

விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: நாம் பயன்படுத்தும் மொபைல் போனுக்கே பாதுகாப்பாக உறை போட்டுத்தான் வைத்துள்ளோம். அதேபோல் உயிரை பாதுகாப்பது நமது கடமை. சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் இருப்பவர்களும் சட்டப்படி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பள்ளி சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதால் எதிரே வாகனத்தில் வருபவர்கள் மீது மோதி அவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டால் பெற்றோருக்கு அந்த இழப்பினை ஈடு செய்யவே முடியாது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். தூய்மையான தூத்துக்குடி திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒரு மரம் நாம் வளர்க்க வேண்டும். தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு நீங்களும் மரம் வளர்க்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேசன் தலைவர் சுப்புராஜ், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மரிய ஜோசப் அந்தோனி மற்றும் அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi