குறிப்பாக, செங்கல்பட்டு சாலையில் செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் ஆகிய இடங்களிலும், கூடுவாஞ்சேரி சாலையில் இள்ளலூர், நெல்லிக்குப்பம், கல்வாய், குமிழி ஆகிய இடங்களிலும், ஓஎம்ஆர் சாலையில் தையூர், செங்கண்மால், வாணியஞ்சாவடி, ஏகாட்டூர், நாவலூர், செம்மஞ்சேரி ஆகிய இடங்களிலும் அதிகளவில் மாடுகள் சாலைகளில் படுத்து உறங்குகின்றன. மாடுகளை வளர்ப்பவர்களும் புயல் மற்றும் மழையை காரணமாக வைத்து தங்களின் தேவைக்காக மாடுகளை பயன்படுத்தி பால் கறந்து விட்டு அவற்றை முறையாக பராமரிக்காமல் சாலைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால், மாடுகள் சாலையிலேயே படுத்து உறங்கி, தங்களின் உணவு தேவைகளையும் தீர்த்துக் கொள்கின்றன.
மேலும், இவ்வாறு சாலைகளில் திரியும் மாடுகள் திடீரென சாலையை கடப்பதாலும், ஒன்றுடன் ஒன்று மோதி சண்டையிடுவதாலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தற்போது, புயல் மற்றும் மழையின் காரணமாக பல்வேறு முக்கிய சாலைகளும் பள்ளம், மேடுகளுடன் காட்சி அளிக்கின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையில் இருக்கும் பள்ளங்களை தேடுவதோடு, எங்கேயாவது மாடுகள் படுத்து உறங்குகிறதா என்று பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவில் சுற்றித்திரிந்த மாடுகள் தற்போது பகலிலும் தங்களின் வாழ்விடங்களுக்கு செல்லாமல் சாலையில் சுற்றித்திரிவதால் வாகனங்களில் செல்பவர்கள் அவற்றின் மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர். மேலும், நடந்து செல்வோரும் மாடுகள் முட்டித்தள்ளி விடுமோ என்று ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். ஆகவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் பிரதான நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.