வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கவிழ்ந்த நிலையில் ஒரு பைபர் படகு மிதந்தது. அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அந்த படகை, தங்களது படகில் கட்டி நள்ளிரவில் கரைக்கு இழுத்து வந்தனர். இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த படகை கைப்பற்றி சோதனை செய்ததில், அது இலங்கையை சேர்ந்த படகு என தெரிய வந்தது. அது போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியதா அல்லது வேறு யாரும் இலங்கையில் இருந்து தப்பி வந்தார்களா, கரையில் இருந்த போது காற்றின் வேகத்தில் இங்கு கரை ஒதுங்கியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.