தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் கண்ணபிரான் (32). மீனவரான இவர், நேற்றுமுன்தினம் மதியம் தனது அண்ணன் அருண் (38) மற்றும் 3 பேருடன் பைபர் படகில் தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீன்களுடன் துறைமுகம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 4 பேர் கரை திரும்பினர். அருண் மட்டும் படகில் இருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலியானார். இதேபோல் மற்றொரு படகில் வந்த குட்டியாண்டியூரை சேர்ந்த ராஜேந்திரன் (46) மின்னல் தாக்கி காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.