Sunday, June 30, 2024
Home » முதல் வெற்றி

முதல் வெற்றி

by Ranjith

2023ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி கைது செய்யப்பட்டார் ஆம்ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். கேள்வி மேல் கேள்வி கேட்டு வெறுப்பேற்றியவர். ஒரு கட்டத்தில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூட சஞ்சய்சிங் தொடுக்கும் கேள்வி கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிப்போனார்.  யாரும் எதிர்த்து கேள்வி கேட்டால் மோடி ஆட்சியில் தான் பிடிக்காதே? உடனே தூக்கி திகார் சிறையில் வைத்து விட்டார்கள்.

காரணமாக டெல்லி மதுபானக்கொள்கை வழக்கை காட்டினார்கள். இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய தொழில் அதிபர் தினேஷ் அரோரா அளித்த வாக்குமூலத்தில் சஞ்சய்சிங் எம்பியை இரண்டு முறை அவரது இல்லத்தில் சந்தித்து ரூ.2 கோடி கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். அதனால் சஞ்சய்சிங் எம்பியை கைது செய்து இருக்கிறார்கள். அவர் மீது சிபிஐ மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்றெல்லாம் காரணம் காட்டினார்கள்.

சஞ்சய்சிங் எம்பி இல்லத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் கணக்கில் வராத அளவுக்கு பலமுறை சோதனை நடத்தினார்கள். ஆனால், இதுவரை எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றமும் இந்த வழக்கில் ஜாமீன் மறுத்துவிட்டது. எந்த ஆதாரமும் இல்லை, இந்த வழக்கில் தொடர்புடைய எந்த ஆதாரமும் கைப்பற்றப்படவில்லை.

அவரது வீட்டில் நடந்த சோதனையில் கூட பணமோ அல்லது பணப்பரிவர்த்தனை தொடர்பான எந்த ஆவணங்களோ சிக்கவில்லை. ஆனால், அமலாக்கத்துறையின் உச்சபட்ச அதிகாரத்தால் சுமார் 6 மாதம் சஞ்சய் சிங் எம்பி சிறையில் அடைக்கப்பட்டார். கீழ்கோர்ட் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை அவர் ஜாமீன்கேட்டு நீதிதேவதையின் வாசல் கதவை தட்டினார். கடைசியாக உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது. அதாவது எந்தவித ஆதாரமும் இல்லாமல், விசாரணையும் இல்லாமல் 6 மாதம் சஞ்சய்சிங் எம்பியை சிறையில் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி அவரை ஜாமீனில் விட உத்தரவிட்டு இருக்கிறது.

இதே மதுபானக்கொள்கை வழக்கில் தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதியும், டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் இதே குற்றச்சாட்டு தான். அதே போல் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவும் இதே வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளார். இதே அமலாக்கத்துறைதான் நடவடிக்கை எடுத்துள்ளது. 9 முறை தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி கொடுத்துள்ள தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் வாக்குமூலம் அடிப்படையில் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்தவித ஆதாரமும், ஊழல் நடந்ததற்கான ஆவணமும் அமலாக்கத்துறை வசம் இல்லை என்பது சஞ்சய்சிங் எம்பி வழக்கில் இருந்து தெரிந்து விட்டது. இது ஆம்ஆத்மிக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த ஜாமீனை அடிப்படையாக கொண்டு சிறையில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால், சிசோடியா ஆகியோர் வெளிவரக்கூடும். ஆனால், அவர்களை கைது செய்து இத்தனை நாட்கள் சிறையில் அடைத்து, துன்பங்களுக்கு உள்ளாக்கிய நடவடிக்கைக்கு யார் பதில் அளிப்பார்கள்?.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi