பொருள் கருவி காலம் விளையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்- என்ற குறளின்படி ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அதற்கு தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ள போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தியாவில், தமிழ்நாடு தொழில் துறைக்கு ஏற்ற இடம் என முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூ.20.71 லட்சம் கோடியாக இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2021-22ம் ஆண்டில் 7.92 சதவீத அளவிலும், 2022-23 நிதியாண்டில் 8.19 என்ற அளவிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முடிவடைந்த உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாட்டின் மூலம் தமிழ்நாடு, வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டிவிடும் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன. ரிலையன்ஸ், டாடா, டிவிஎஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட பல இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது, என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசியது, தொழில் துறையில் விரைவில் தமிழ்நாடு முதலிடத்தை பிடிக்கும் என்பதற்கான சான்றிதழாகும்.
பிரிட்டன் அமைச்சர், மஹிந்திரா குழுமம் ஆனந்த் மஹிந்திரா, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால், கோத்ரெஜ் நிறுவன தலைவர் நிசாபா கோத்ரெஜ், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் வேணு ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலதிபர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைவர்களை தமிழகத்தை உற்று பார்க்க வைத்துள்ளது. முதல் நாளில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் ரூ.5.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் கையெழுத்தாகி உள்ளன. ஹூண்டாய், குவால்காம், பர்ஸ்ட் சோலார், கோத்ரெஜ், டாடா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. 2வது நாளான கடைசி நாளில் 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மொத்தத்தில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்துள்ளது. இதன் மூலம் 14.5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12.30 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவே வியக்கும் வகையில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக மாநாடு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இதே திட்டமிடலும், வேகத்துடன் செல்லும்போது 2030-ம் ஆண்டுக்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைந்து விடுவோம். விரைவில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.