ஜான்பூர்: உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர்கள் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய். இவர்கள் இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணைக்காக இவர்கள் நேற்று முன்தினம் ஜான்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த 2 மர்ம நபர்கள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டனர். இதில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ உள்பட 6 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.