பெரம்பூர்: சென்னை புரசைவாக்கம் ஆர்.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி பவித்ரா (22). 4 மாத கர்ப்பமாக உள்ளார். நேற்று இருவரும் புரசைவாக்கம் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது ஓட்டேரி பிரிக்கிளின் ரோட்டில் சவ ஊர்வலம் சென்றது. அப்போது சிலர் பட்டாசு வெடித்துகொண்டு சென்றனர். அப்போது ஒரு பட்டாசு வெடித்து ஜெயச்சந்திரன், அவரது மனைவி பவித்ரா ஆகியோர் மீது விழுந்ததால் தட்டிக்கேட்டுள்ளனர். இதன்காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரைஒருவர் கை மற்றும் கற்களால் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஜெயச்சந்திரன், அவரது மனைவி பவித்ராவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயச்சந்திரன் தனது நண்பர்களை வரவழைத்து ஓட்டேரி சுடுகாட்டில் வைத்து எதிர்தரப்பினரை சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் சசிதரன், கோபி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அயனாவரம் போலீஸ் உதவி கமிஷனர் முத்துகுமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி ஓட்டேரி பாஷ்யம் முதல் தெருவை சேர்ந்த சதீஷ் (39), செல்லப்பா தெருவை சேர்ந்த சரவணன் (33), புரசைவாக்கம் ஆர்.கே.புரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (22), ஜெகதீஸ்வரன் (எ) ஜக்கு (25) ஆகியோரை கைது செய்தனர்.