ஆவடி: ஆவடி தீயணைப்பு துறை சார்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தற்காத்து கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு பயிற்சி ஒத்திகை கொடுத்தது. தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அபினேஷ் குமார் உத்தரவின்படி, ஆவடி தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிக்குழு நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி, ஆவடி காமராஜர் நகர் 1வது தெரு அருகே நேற்று காலை நடந்தது. இதில் வடகிழக்கு பருவ மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தங்களை எப்படி தற்காத்து கொள்ள முடியும் என்பது குறித்து செயல் முறை விளக்கம் தரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட அலுவலர் சென்னை புறநகர் தென்னரசு முன்னிலையில் ஆவடி தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணிக்குழு பணியாளர்கள் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியில் நடித்து காட்டினர். மேலும், மீட்பு பணியின் போது பயன்படுத்தும் தற்காப்பு கருவிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. இதில், வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட அலுவலர் சென்னை புறநகர் தென்னரசு, ஆவடி நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் தீ அணைப்பு ஒத்திகை கண்டு களித்தனர்.