காரமடை: காரமடை அருகே 52 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அடுத்துள்ள சென்னிவீரம்பாளையம் மலைப் பகுதியில் சுமார் 4.16 ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்ட வீடு இல்லாத மக்கள் சுமார் 140 பேர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை ஒட்டியுள்ள காய்ந்த புற்களில் நேற்று மதியம் 3 மணியளவில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்து அருகில் இருந்த இந்த குடியிருப்பினை சூழ்ந்தது. இதில் ஒரு குடிசையில் பற்றிய தீ தொடர்ந்து அடுத்தடுத்து வீடுகளுக்கும் பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அப்பகுதியில் இருந்த சுமார் 52 வீடுகள் முழுவதுமாக இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகின. வீடுகளில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகின. பகல் நேரம் என்பதால் அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடுகளில் எவரும் இல்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.