ஆலந்தூர்: புழுதிவாக்கத்தில் பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. புழுதிவாக்கம் பிரதான சாலையில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்துபவர் உத்தமன் (40). இவர் புழுதிவாக்கம் எம்.பி.ராஜகோபால் 2வது தெருவில் உள்ள தனது குடோனில் பழைய செல்போன் பேனல்களை மொத்தமாக வாங்கி கழிவு ஆலைக்கு அனுப்ப வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு, அங்கு வைத்திருந்த பொருட்கள் எரிந்தன. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வேளச்சேரி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் குடோனில் இருந்த கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.