சென்னை: நிதியாளர் பதவி, ஒருங்கிணைந்த நூலக பணி தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சிதேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு(கணினி வழித்தேர்வு) கடந்த மார்ச் 10ம் தேதி மற்றும் ஒருங்கிணைந்த நூலக பணிகள்/ சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான(நேர்முக, நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) கணினி வழி எழுத்து தேர்வு கடந்த மே 13 மற்றும் 14ம் தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 15 தேர்வர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கான நேர்முக தேர்வு வருகிற 31ம் தேதி நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த நூலகப் பணிகள்/ சார்நிலை பணிகளில் அடங்கிய நூலகர் (ம) தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் பதவிகளுக்குரிய(நேர்முக பதவிகள்) கணினிவழிச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 40 தேர்வர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் வெளியிடப்பட்டுள்ளது.