Thursday, September 19, 2024
Home » நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது

by Arun Kumar

* சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை ஆட்சேபம்
* தேவநாதனை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோரி மனு தாக்கல்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனுக்கு எதிராக தினமும் ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தேவநாதன் உள்பட 3 பேரும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், இந்த வழக்கில் மற்றவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் யார் யாருக்கு நிதி சென்றுள்ளது, எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.இதனிடையே தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி எதுவும் செய்யவில்லை.

அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பி தர தயாராக உள்ளோம். அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வைப்பீடுகள் முதிர்வடைந்தும் தங்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை என்றும், இந்த நிதி முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் டி.பாபு ஆஜராகி, இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். 800க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை ஆகஸ்ட் 28ம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

You may also like

Leave a Comment

seventeen + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi