சென்னை: கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சக்திநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி மேகலா. ஏழ்மை நிலையில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது 10 வயது மகளை கத்தியால் கொடூரமாக ெவட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த மேலும் இரண்டு பேரையும் வெட்டிய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த சம்பவத்தில் கொடூர வெறியனாக செயல்பட்டுள்ள காட்டுமிராண்டியை காவல்துறை உரிய சட்டப்படி அதிகப்பட்ச தண்டனையை பெற்று தர அரசு முனைப்பு காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான செயல்களை நன்கு படித்த சாப்ட்வேர் இன்ஜினியரே செய்து இருப்பது மனவேதனையை தருகிறது. இதுபோன்ற சமூகவிரோத குற்றச்செயல்களை புரியும் நபர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரபு மற்றும் தடுக்கச் சென்று வெட்டுபட்டு சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்திற்கு உடனடியாகத் தகுந்த நிவாரண நிதி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.