திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏரியா மேலாளராக முரளி (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு திருவள்ளூர் மாவட்டம், ஆரணி கிளையின் கிளை மேலாளராக முகில்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கிளைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் 16 உறுப்பினர்களின் ஆவணங்களை பெற்று ரூ.9 லட்சத்து 34 ஆயிரம் கடனாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனத்தினர் தணிக்கை செய்தபோது அங்கு ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்து 496 நிதி இழப்பீடு ஏற்படுத்தி முகில்ராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து நிதி நிறுவனத்தின் ஏரியா மேலாளர் முரளி நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் முகில்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.