Thursday, July 4, 2024
Home » நிதி நிறுவன மோசடியில் 16 பேர் கைது திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

நிதி நிறுவன மோசடியில் 16 பேர் கைது திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

by Karthik Yash

சென்னை: சட்டப் பேரவையில் போலீஸ் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:
ராமச்சந்திரன் (இந்திய கம்யூ): கிருஷ்ணகிரி பகுதியில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை அடுத்து பொதுமக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் விவசாயத்தையும் நிலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் அத்துமீறலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும். போலீஸ் நிலையத்துக்கு வரும் விசாரணை கைதிகளிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் லாக்அப் மரணங்களை தடுக்க முடியும். போக்சோ வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க தனியாக சட்டம் இயற்ற வேண்டும். மாநில எல்லைகளில் லாட்டரி விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆருத்ரா நிறுவனம் பல கோடி மோசடி செய்துள்ளது. அதில் ஈடுபட்டவர்கள் அரசியல் பிரமுகர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் ராமச்சந்திரன் இங்கே பேசும்போது, நிதி நிறுவனங்கள் முறைகேடுகளைப் பற்றி எடுத்துச் சொன்னார். அதிலும் குறிப்பாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சி இருந்த போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வைப்பீடுகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு மாத வட்டி என கவர்ச்சிகரமான ஓர் அறிவிப்பை வெளியிட்டு, செப்டம்பர் 2020 முதல் சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.2348 கோடி முதலீடு மற்றும் வட்டியை திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகுதான், அந்த புகார்களின் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து 22 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டு அவர்களில் இயக்குநர்கள், ஏஜென்ட் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர் ஆகியோரை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட எதிரிகள் மீது கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (லுக் அவுட் நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது. ரொக்கம், வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் சுமார் 96 கோடி ரூபாய், 93 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

இதேபோல், ஹிஜாவு, ஐஎப்எஸ், எல்பின், சிவிஆர்எஸ் சிட்ஸ், ரஹத் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் மோசடியில் ஈடுபட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கையை இந்த ஆட்சி எடுத்து இருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுடைய சொத்துகள் முடக்கம், வங்கிக் கணக்குகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறேன்.
இவற்றில் ஹிஜாவு, ஐஎப்எஸ், ரஹத், எல்பின் ஆகிய நிதி நிறுவனங்கள், கடந்த அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற நிதி மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களானாலும் இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த அவையின் மூலமாக அவர்களை கேட்டுக் கொள்கிறேன். மக்களிடம் ஆசையை தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் தற்போது பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றன. ஆகவே, இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு கடுமையாக உத்தரவிட்டிருக்கிறேன். இத்தகைய நிறுவனங்களின் மோசடியை தடுக்க முதன்முதலில் சட்டம் கொண்டுவரப்பட்டது எப்போது என்றால், கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தான். இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த அரசு பொறுப்பேற்றப் பிறகு எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

17 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi