Thursday, September 19, 2024
Home » பைனான்ஸ் தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை: தேனி அருகே சோகம்

பைனான்ஸ் தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை குத்தி கொன்று வாலிபர் தற்கொலை: தேனி அருகே சோகம்

by Arun Kumar

தேனி: தேனி அருகே கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்று பைனான்ஸ் ஊழியர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி அருகே அரண்மனைப்புதூர், முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). தனியார் நிதி நிறுவன ஊழியர். வெளியிலும் பைனான்ஸ் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி அஜிதா (33), தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் பிரித்விகா (5). சதீஷ்குமாருக்கு சொந்தமாக செய்து வந்த பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த அஜிதாவும் வேலைக்கு செல்லவில்லை. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் சதீஷ்குமார் கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர் மகள் பிரித்விகாவையும் கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர், வீட்டிற்குள்ளேயே சதீஷ்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் கண்டமனூரில் உள்ள அஜிதாவின் பெற்றோர், மகளை செல்போனில் பலமுறை அழைத்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், தங்கள் மகன் சுரேந்தருடன் நேற்று முன்தினம் இரவு அஜிதாவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். காலையில் இருந்து வீடு பூட்டியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பழனிசெட்டிபட்டி போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அஜிதா, பிரித்விகா கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தனர். அருகில் சதீஷ்குமார் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதையடுத்து, போலீசார் உடல்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரின் விபரீத முடிவுக்கு தொழில் நஷ்டம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

19 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi