திரைப்பட விருது விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்படவிருதுகள், திரைப்படமானியம் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் சார்பில் 2019 முதல் 2022 வரை திரைப்படவிருதுகள், 2018 முதல் 2022 வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் மற்றும் 2015 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி முதல் கடந்த 8ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என ஏற்கனவே நாளிதழ்களில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என்கிற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்கள் பெறப்படும் நாளினை வரும் 31ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், உறுப்பினர்-செயலாளர், திரைப்படத் துறையினர் நலவாரியம், முதல் தளம், மாநில செய்தி நிலையம், கலைவாணர் அரங்க வளாகம், சென்னை-600 002. என்ற முகவரியில் வரும் 31ம் தேதி மாலை 5 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) பெறப்படும்.இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி