திருவண்ணாமலை: இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக மிரட்டும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சினிமா இயக்குநர் மீது மனைவி புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை வேங்கிக்கால் எழில் நகரை சேர்ந்தவர் பூர்ணிமா (41). இவருக்கு ஏற்கனவே கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்றார். அதைத்தொடர்ந்து, கடந்த 2016ல் குடியாத்தம் செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருவண்ணாமலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பூர்ணிமா நேற்று அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: என்னுடைய கணவர் லட்சுமிகாந்தன் சினிமா துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். பானா காத்தாடி உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2016ல் அவரை மறுமணம் செய்து கொண்டு சென்னையில் ஐந்தாண்டுகள் வசித்து வந்தோம். திருவண்ணாமலையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகலாம் என அவர் தெரிவித்ததால் தற்போது என்னுடைய தாய் வீட்டில் தங்கி இருக்கிறேன். இந்நிலையில், எனது கணவர் லட்சுமிகாந்தன், சுவேதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிகிறது. இதுகுறித்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், லட்சுமிகாந்தனிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.